செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க கெளதம் மேனன் தயாரிப்பில் ஒரு படம் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
'இரண்டாம் உலகம்' படத்துக்கு ஏற்பட்ட சிக்கலால் நீண்ட நாட்களாக படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்தார் இயக்குநர் செல்வராகவன். அதனைத் தொடர்ந்து சிம்புவை நாயகனாக வைத்து தொடங்கிய 'கான்' படமும் முதலீட்டாளர்கள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
'மாலை நேரத்து மயக்கம்' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். அப்படத்தை அவருடைய மனைவி கீதாஞ்சலி இயக்கி இருக்கிறார். இப்படம் ஜனவரி 1-ம் தேதி வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு பேய் படத்துக்கான கதை எழுதி வருவதாக செல்வராகவன் ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது, அக்கதையை எழுதி முடித்துவிட்டார் என்றும், அப்படத்தின் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். மேலும், இப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தனது ஃபோட்டான் கத்தாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்கள்.
தமிழ் திரையுலகின் மூன்று முக்கியமான இயக்குநர்கள் ஒரே படத்தில் இணையவிருப்பதை திரையுலகினர் பலரும் ஆச்சர்யத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இக்கூட்டணி புதுமையாக இருக்கும் என்பது தான் பலரது கணிப்பும்.
No comments:
Post a Comment